Tuesday, August 30, 2005

காதலில் காதல்.! (1)

அம்மா வீட்டிற்கு வந்திருந்தா எனக்கு சுத்தமாய் பிடிக்கேல்ல, ஒரு கடிதம் போட்டிட்டு வந்திருக்கலாம். சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறா. இன்னும் நாலைஞ்சு நாளைக்கு ஒரே புராணமாய் போப்போது. வர வர நின்மதியில்லாமல் போச்சு என்ர அறைக்கதவை பூட்டி திறப்பைக்கொண்டு போகவேணும். இல்லை என்றால் மனிசி அறையை ஒரு கை பாத்திடும். போனமுறை வந்து செய்த வேலை காணும். படங்கள் எல்லாத்தையும் பொறுக்கி ஒழிச்சுப்போட்டா. வந்த கோவத்திற்கு வேறை யாரும் என்றால் நடக்கிறதே வேறை அம்மா என்டதால விட்டிட்டு இருந்தனான்.

அவாக்கு இதே வேலையாப்போச்சு எத்தனை வருசமாச்சு சொன்னாக்கேக்கமாட்டன் என்கிறா. அவாவும் பாவம் தானே. என்ர காதல் புனிதம் அவவுக் எப்படிப்புரியும். பாவம் வந்தவ சந்தோசமாய் போகட்டும். என்ன கதைச்சாலும் சத்தம் போடாமல் இருப்பம். அந்த நினைவுகளோட வாழுறதே எனக்கு சந்தோசம் தான். அதை பெத்த தாய் அனுமதிக்க மாட்டா தான். இருந்தாலும் ஏனக்கு அதில நின்மதி. இப்ப நினைச்சாலும் வலு சந்தோசம் தான்.
------
அப்ப நான் A/L படிச்சிட்டிருந்தனான் ராதிகாவும் இந்த சிவபுரம் மகாவித்தியாலத்தில தான் படிச்சிட்டிருந்தவ. அவ அப்ப சின்னப்பிள்ளை ஆனா என்ர மனசில ஆழமாய் பதிஞ்சிட்டா, அழகான பிள்ளை தான். அவளின்ர பேச்சு தான் என்னைக்கவர்ந்தது. துடுக்காய் பேசுவாள், பயப்பிடத்தெரியாது. எங்கட ஆசிரியர்கள், மாணவர்கள் என்று எல்லாரிட்டையும் பிரபல்யமாய் இருந்தவள்.

சிவபுரத்தில இடம் பெயர்ந்து வந்திருந்தாள், சொந்த இடம் யாழ்ப்பாணத்தில எங்கையோ தான். ஏழாம் ஆண்டில் தான் அவள் முதல் முதல் சிவபுரம் வந்தவள். வந்த கொஞ்ச நாளில தன்ர திறமைகளைக்காட்டி எல்லாரின்ர மனசிலையும் இடம் பிடிச்சிட்டாள்.
முதல் முதல் அவள் எனக்கு அறிமுகமானது ஒரு சின்னச்சண்டையில தான். எங்கட பெடியள் வெறும் கமறாவை வைச்சு பொம்பிளைப்பிள்ளைகளை படம் எடுக்கிறம் என்று பிளாஸ் அடிச்சிக்கொண்டு இருந்தவங்கள். அதுக்குள்ள பிலிம்றோல் இல்லை இதைத்தெரியாத அந்தப்பிள்ளையள் பயந்து வரமறுத்திட்டுதுகள். என்ன இது வேலை என்று கேக்க சின்னனுகளை அனுப்பி விட்டிருந்தவை


அப்ப வந்தவள் தான் ராதிகா. பயப்பிடாமல் வந்து எங்கட பெடியளை நல்ல கேள்வி கேட்டாள். இன்னும் ஒருபடி மேல போய் கமறாப்பறிச்சு பிலிம்றோலைக்கழட்ட முயன்றாள் அப்ப தான் அவைக்கு தெரியும் வெறும் கமறாவை வைத்து பிளாஸ் அடிக்கிறம் என்ற விசயம். அதன்பிறக பிளாஷ் என்று எல்லாரும் நினைத்திருக்க நான் மட்டும் ராதிகாவை பலவடிவங்களில் அடிக்கடி படம் எடுப்பேன். இரண்டு அல்பங்கள் நிறைய அவளின் படங்கள் என்னிடம் இருக்கிறது. இது அவளிற்கே தெரியாத விடயம். எனது சகதோழன் நெருங்கிய நண்பன் கரனுக்கு மட்டும் தெரியும். சிவா வேண்டாமடா என்று பலமுறை சொல்லியிருக்கிறான்.
அதுக்கு பிறகு பிள்ளையள் எல்லாம் பயப்பிடாமல் வருங்கள் படத்தை எடுத்தா எங்கட பொடியள் கலியாணம் முடிச்சமாதிரி அலுவல் பண்ணிப்போடுவாங்கள் என்ற பயம் தான் அந்தப்பிள்ளையளுக்க.
அன்று தான் அவள் எனக்கு அறிமுகம். அவளின் துணிவு எனக்கு பிடிச்சிருந்தது. அதுக்கு பிறகு அவளை கவனிக்க ஆரம்பிச்சிட்டன். அன்று "கெட்டிகாரி எப்பவும் இப்படி துணிவா இருக்கவேணும் " என்று பாராட்டிவிட்டேன். "நன்றி அண்ணா, உங்கட நண்பர்களிற்கு கொஞ்சம் அறிவுரை சொல்லக்கூடாதா?" என்று என்னைக்கடிச்சு விட்டுச்சென்றாள்.
அன்றில் இருந்து அவளோடு பழக்கம் ஆரம்பமானது.

ஒரு நாள் நான் ரியுசனில் நிக்கும் வேளை. என்னோடு O/L லில் கூடப்படிச்ச கணேஸ் ராதிகாவை ஏத்திக்கொண்டு வந்தான். யார் என்று விசாரித்ததில் அவள் கணேஸின் ஓரே ஒரு செல்லத்தங்கை என்ற விவரம் கிடைத்தது. அவன் எனது நண்பன் தான் நான் A/L லில் கலைப்பிரிவிற்குள் நுழைந்தேன். அவன் வர்த்தகம் படிச்சவன். இருந்தாலும் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். அவனின் தங்கை என்பது எனக்கு இன்னும் மகிழ்ச்சியே.
ஒரு சில வாரங்கள் ஓடின. இரண்டு நாளாய் அவளை நான் காணவே இல்லை. எங்கை என்று விசாரிச்சதில் அவள் பெரியமனிசியாகி விட்டாள் என்ற செய்தி கிடைச்சது. சாதாரனவிடயம் தானே ஆனால் அது என்னை ஆட்டிப்படைத்தது. கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்தேன். ஏன் என்ற கேள்விக்கு அவள் பள்ளிக்கூடம் வராத 3 கிழமைகள் என்னை வாட்டிய ஏதோ ஒரு நினைவு பதில் சொன்னது. அதுவரை இருந்த அன்பு காதலாய் மாறியதாக உணர்ந்தேன். ராதிகாவிற்கு மஞ்சள் நீராட்டு விழா அவளது பள்ளி தோழிகள் ஆசிரியர்களிற்கு சொல்லி சிறப்பாக நடந்தது. கணேஸின் நண்பர்கள் என்ற ரீதியில் நாமும் கலந்து கொண்டோம். உண்மையைச்சொன்னால் நான் அந்த சடங்கிற்காய் அதிக வேலை செய்திருந்தேன். அதில் எனக்கு மகிழ்ச்சியும் கூடத்தான். ராதிகா அன்று நடந்து கொண்ட விதத்தில் அவளிற்கு இந்த நிகழ்வில் விருப்பம் இல்லை என அறிந்து கொண்டேன். சாதாரனமாகவே அவள் புதுமை பேசும் பெண். இதை எப்படி ஏற்பாள்.? (நமது சமூகத்தில் இந்த சடங்கு என்பது ஒரு நிகழ்வாக கொண்டாடப்படுவது வழக்கமே)

நண்பனின் தங்கை என்பதால் நண்பர்கள் எல்லோரும் சேந்து கொஞ்சக்கொஞ்ச காச சேத்து ஒரு பரிசுப்பொருள் வாங்குவதாக திட்டமிட்டிருந்தார்கள். அந்த பரிசுப்பொருளுக்கு நானும் காசு கொடுத்திருந்தேன். ஆனால் அவளிற்காய் தனியாக ஒரு சிறிய மோதிரமும் வாங்கியிருந்தேன். கடைசி வரை அவளிற்கு அதைக்கொடுக்க முடியவில்லை. இப்பவும் அதை வைத்திருக்கிறேன்.
அதன் பிறகு அவளில் பலமாற்றங்கள். வளர்ந்து விட்டாள் அழகாய் மிளிர்ந்தாள். அவளை பார்த்திட்டு இருப்பது எனது முழுநேர வேலையாக மாறிவிட்டது. அவளது பள்ளிக்கூட மற்றும் ரீயுசன் நேர அட்டவணைகளிற்கேற்ப எனது வேலைகளை குறித்துக்கொண்டேன். எப்பொழுதும் அவளைத்தரிசிப்பதாற்காய் காத்திருப்பேன். அதில எத்தனை சுகம். அடிக்கடி நினைத்துச்சிரிப்பேன்.
அவளோடு கதைப்பதற்கான, அவளுக்கு உதவி செய்வதற்கான சந்தர்ப்பங்களை வலிய நானாய் உருவாக்கினேன். அவளுக்கு தெரியாத நேரம் அவளது துவிச்சக்கரவண்டியில் காத்தைத்திறந்து விடுவேன். அவளிற்கு முன்னால் காற்றடிப்பேன். அவளது அன்பைப்பெற பல வழிகளில் முயன்றிருக்கேன். ஒரு முறை நல்ல மழை அவள் குடை கொண்டு வர மறந்துவிட்டாள். என்ர குடையைக்கொடுத்தேன். "நீஙக என்ன செய்வீங்க" என்று கேட்டாள். "பக்கத்தில்தானே வீடு போய்விடுவேன்" என்று சொன்னேன். மறுநாள் குடையை திருப்பித்தந்தாள். எனது பொருட்களை சாதாரனமாகவே யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை.

என்னைப்பொறுத்தவரை அவள் வேறாக தெரியவில்லை. அன்றில் இருந்து அந்தக்குடைக்கு தனியான கவனிப்பு அந்தப்படியே இப்போதும் வைத்திருக்கிறேன். நான் வீட்டிற்குள் எனது அறையினுள் அடிக்கடி பிடிப்பதுண்டு. அதற்குப்பிறகு அந்தக்குடை வெளியுலகம் சென்றதில்லை. இப்படி அவளுடைய நினைவுகள் சுமந்து என்னோடு வாழும் ஒவ்வொரு பொருட்களிற்கும் கதைகள் உண்டு.

ஓரு முறை சரஸ்வதிப்பூசைக்கு அவள் தனி நடனம் ஆடியிருந்தாள் அன்றும் படம் எடுத்திருந்தேன். "ஏன் என்னை நீங்கள் படம் எடுத்தனீங்கள்" என்று அவள் கேட்ட கேள்விக்கு அவளிடம் பதில் சொல்ல எனக்கு முடியவில்லை. எங்கள் வகுப்புப்பிள்ளைகளை எடுக்கும் போது உங்களையும் எடுத்தான் என்று கரன் சொல்லிச்சமாளித்தான். அப்படியே ஒரு சில படங்களையும் கொடுத்தேன். பணம் கட்டாமல் வாங்க மாட்டன் என்று சொல்லிவிட்டாள். அதற்காக அவளிடம் வாங்கிய 125 ரூபா இன்னும் என்னிடம் உள்ளது. இப்படியே தொடந்தது வருசம் ஓன்று போயாகிவிட்டது. அவளிடம் காதல் சொல்ல நான் நினைக்கவில்லை. சொல்லவும் முடியவில்லை. அவளை காதலிப்பதாக கூறிய இன்னொருவனை அவள் பேசியதாக அறிந்தேன். அதனால் எனக்கும் அவளிற்கும் விரிசல் வந்துவிடக்கூடாது என்பதால் காத்திருந்தேன். அவளிற்கு முன்னால் என்னை பகிடிபண்ணுவார்கள் பட்டம் தெளிப்பார்கள். இருவரும் ஒரே நேரம் ஒரு இடத்தில் நின்றால் குடும்பமா வந்திட்டியளா என்று கேட்பார்கள். ஆனால் இவைகள் அவளிற்கு விளங்கியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை அந்த நேரங்களில் அவளிடம் எந்த மாற்றத்தையும் நான் கனவில்லை. நான் அவளைக்காதலிக்கும் விடையம் எனது வீட்டிற்கு சாதுவாக தெரிந்திருந்தது. அப்படியே எனது ஆசிரியர்களிற்கும் தெரிந்திருந்தது. "சிவா ராதிகா எங்கே" என்று என்னைக்கேலி பண்ணியிருக்கிறார் எங்கள் தலைமை ஆசிரியர் ராகவன். அது எனக்கு பலத்த சந்தோசத்தைக்கொடுக்கும். அந்த நிமிடங்கள் நான் பறந்து கொண்டிருப்பேன். இப்படி எனக்குள்ளே காதலை புதைத்த நான். கடைசிவரை என் காதலை அவளிடம் சொல்லாமல் இருப்பேன் என்று நினைக்கவில்லை. சொல்வது அவசியமாகவும் எனக்க படவில்லை. "

அடுத்தபகுதி

Friday, August 12, 2005

உயிர் ஊசலாடிய நிமிடங்கள் - சிறுகதை

மத்திய லண்டனை நோக்கி பேரூந்து சென்று கொண்டிருந்தது. அருகே அமர்ந்திருந்த தங்கையின் கடி தாங்க முடியவில்லை. "அக்கா இப்ப இந்த பஸ்ஸில குண்டிருந்தா நாங்கள் காலி" என்று நகைச்சுவையாக பேச்சை ஆரம்பித்தவள். "அது சரி உந்த கிபீர் பொம்பர் எல்லாத்திலையும் இருந்து தப்பி வந்து எவனோ ஒருத்தன் எதுக்காயோ வைக்கிற குண்டு வெடிச்சு சாகோணுமே". துக்கம் கலந்த ஒரு தொனியில் ஒலித்தது மீதிவார்த்தைகள். சிரிப்பு வரவில்லை! சிரிக்கவும் முடியவில்லை "கவலைப்படாதேடி இத்தனை கண்டங்களை தாண்டி வந்தனாங்கள் இப்படி அற்பமாய் போக மாட்டம், அதுவும் நீ போக மாட்டாய் சத்தம் போடாத சனம் தப்பாய் நினைக்கப்போகுதுகள்". என்று மெல்ல அவளை சமாதானப்படுத்தினேன்.

இன்னும் அவளிற்கு கிபீர் எல்லாம் நினைவில இருக்கே, அது சரி எப்படி மறக்கமுடியும் அந்த நாட்களை. அப்போது எனக்கு பத்து பதினைஞ்சு வயசிருக்கும், நல்லாய் நினைவிருக்கு ஒவ்வொரு நாளும் கிபீருக்காக பயந்து ஓடியிருக்கிறம் இப்ப நினைச்சாலும் மனசில என்னவோ செய்யும். சாதாரனமாய் எல்லாருக்கும் காலை விடியும், விடிஞ்சு பள்ளிக்கூடம் போய் காலை ஒன்று கூடலுக்காய் கூடியிருப்போம், சிலநேரம் அந்த நேரம் நாசமறுப்பான் (கிபீர்) வருவான் விழுந்து கிடவுங்கோ எண்டு மாணவர் தலைவர்கள் சொல்ல பிள்ளைகள் எல்லாம் தலை தெறிக்க ஓடுங்கள் காரணம். சனநெருக்கமான இடத்தில தான் அடிப்பாங்கள், காடுகள் வழிய போய் தனியாய் மறைஞ்சிருந்தா அடியாங்கள் என பெற்றோரின் அறிவுறுத்தலாய் கூட இருக்கலாம். (வெள்ளை சீருடை பளிச்சென்று தெரியும் அல்லவா?) நான் கூட அப்படி ஓடியிருக்கிறேன் அதை எப்படி மறக்க முடியும் நல்லா நினைவிருக்கு. வன்னியில எங்கள் பாடசாலை மைதானம் பின்னால் இருந்த பெரிய காட்டை அழிச்சு உருவாகிக்கொண்டிருந்தது. அந்தக்காட்டுக்குள் தான் ஓடுவோம் முட்கள் காலைக்கிழிக்கும் நோக்கூட அறியமாட்டம். அவன் போயிட்டான் என்று தெரிஞ்சாப்பிறகு தான் காலில முள்ளுக்கிழிச்ச காயம் தெரியும்! ரத்தம் வழியிறது தெரியும்! இப்படி எத்தனை நாள். அன்று முட்கள் கிழிச்ச காயங்கள் தழும்புகளாக இன்னும் கால்களில இருக்கு அடிக்கடி நினைவு படுத்திக்கொள்ள ஒரு ஞாபகச்சின்னமாய்!. இன்னும் எத்தனை பேருக்கு கை, கால் இல்லாமல் போயிருக்கும். அதிகமாய் மத்தியான நேரம் வருவான். அதுவும் இடைவேளை நேரம் எங்கட சாப்பாட்டில மண்ணைப்போடத்தான் வருவான். எத்தனை நாட்கள் திட்டியிருப்பம் இந்த ஆங்கிலப்பாடநேரம் வாறதுக்கு உனக்கு என்னடா என்று.

எங்கையோ குண்டு போட்டிட்டு அவன் போக இண்டைக்கு நாங்கள் தப்பிச்சம் என்று நாங்கள் மகிழ்ந்திருக்க. "எங்கோ ஒரு மூலையில கண்டிப்பாக செத்தவீடு நடக்கும். செத்த உயிருக்காய் கவலைப்படுறதா? தப்பின எங்களை நினைச்சு சந்தோசப்படுறதா?" விதி அப்படி விளையாடினது.

"நெருப்பு மழையே வந்தாலும் ஒருநாளும் எங்கள பள்ளிக்கூடம் போகாமல் நிக்கச்சொல்லி அம்மா சொல்லமாட்டா. நாங்களும் நின்றதில்லை. "எங்க செத்தாலும் சா தானே இங்க வாறது அங்க வராதா?" வாண்டுகளாய் நாங்கள் 5 பேர் அப்ப எங்களக்கு அம்மா சொன்ன அறிவுரை, எல்லாரும் ஒரு இடத்தை போய் நிக்கோணும் ஓடினாலும் சரி விழுந்தாலும் சரி ஒன்றா செய்யுங்கோ என்று சொல்லுவா. வீட்டிலை நிண்டாக்கூட 5 பேரையும் இழுத்துக்கொண்டு போய் ஒரு மரத்திற்கு கீழ வைச்சிருப்பா கூட்டமாய் நில்லாதேங்கோ என்று மற்றவை பேசுவினம் எங்களுக்கு கிட்ட வராயினம். ஆனா அம்மா சொல்லுவா "செத்தால் எல்லாரும் சேந்து சாவம், நான் இல்லாமல் பிள்ளையளும் பிள்ளையள் இல்லாமல் நானும் என்ன செய்ய முடியும்" என்பார், எல்லாரையும் சுத்தி இருக்க சொல்லிப்போட்டு அம்மா அணைச்சுக்கொண்டிருப்பா. அப்படி வாழ்ந்தனாங்கள், இரண்டு இரண்டரை வருசம் இப்படியே இருந்தனாங்கள். அந்த எமனிட்ட இருந்து தப்பிறது உண்மையா சின்ன விசயம் இல்லை.

வழமையா ஆமிக்கு ஏதாவது இழப்பு என்றா எங்களுக்கு மகிழ்ச்சி தான். ஆனால் சிலசமயங்கள் எங்கள் பள்ளிக்கூடத்திற்கு கிட்ட உள்ள மாவீரர் துயிலும் இல்லத்திற்கு வித்துடல்கள் கொண்டு வருவார்கள், அந்த நேரம் மனம் கனதியாக இருந்கும். இப்படித்தான் கட்டுநாயக்கா விமான நிலையம் தாக்குதலின் போது விமானங்கள் அழிக்கப்பட்ட செய்தியைக்கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில ஆரவாரிச்ச ஆயிரம் ஆயிரம் தமிழர்களில நானும் ஒருத்தியா இருப்பன். சிறுக சிறுக எங்களை தினம் தினம் கொலை செய்த அரக்கர்கள் அழிஞ்ச, அழிக்கப்பட்ட நாள் அதுவல்லவா உயிரைக்கையில பிடிச்சுக்கொண்டு ஊசலாடிய அந்தக்கணங்களை யாரால மறக்கமுடியும். அநுபவிச்ச யாருக்கும் உயிருள்ளவரை மறக்காது . அந்த அரக்கனிட்ட ஒருநாளா, இருநாளா எத்தனையோ நாட்கள் தப்பினம். அங்க அவங்கள் எங்கள அழிக்க குண்டு போட்டாங்கள் தப்பித்தப்பி வந்தம் இங்க வந்து சம்பந்தமே இல்லாமல் சாகடிக்கப்படுவமா என்ன? நினைச்சுப்பார்க்கவே கண்கள் கலங்கியது. "என்ன அக்கா கிபீரையும் பங்கரையும் நினைச்சிட்டியே நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்திட்டுது வா வா" என்ற தங்கையின் குரல் என்னை மறுபடி நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. மெல்ல வண்டியை விட்டு இறங்கினோம். " அப்பாடா பிள்ளையாரை நேந்து கொண்டிருந்தனான் ஒண்டும் நடக்க கூடாது எண்டு போய் ஒரு தேங்காய் உடைச்சுப்போடு" என்றவளை பாத்து சிரிப்பு வந்தது பத்திரமாய் இறங்கிய சந்தோசத்தினாலோ?.

free hit counter