Friday, November 25, 2005

அஞ்சலி! [சிறுகதை]

புதுக்குடியிருப்பு மாவீரர் மயானத்தை அடைந்ததும். விறு விறுவென என் கால்கள் காந்தி அக்காவின் கல்லறையை நோக்கி
நடைபோட்டது. பையினில் இருந்த மலர்கள் அவளிற்கு அஞ்சலி செலுத்த மலர்ந்து கொண்டன. இங்கு வருகிறோம் என்று தெரிநதவுடன்.
அவசர அவசரமாய் பறித்த மலர்கள். இதைப்போல ஒரு நாள் தான் நான் விரும்பாத அந்த நிகழ்ச்சி நடந்தேறியது.

அன்று மழை பெய்து கொண்டிருந்தது. மாவீரர் துயிலும் இல்லம் நோக்கி எங்கள் 'வான்' நகர்ந்து கொண்டிருக்கிறது.
'பாண்ட்' வாத்திக்குழுவில் நானும் இணைந்ததில் இருந்து ஒவ்வொரு முறை இங்கு வரும்போது என் வயிற்றிற்குள் புதுப்புது நோய்களை உணர்வேன்.
மாவீரர் வித்துடல்களிற்கு அஞ்சலி செலுத்தும் போது என் நெஞ்சம் எதையோ நினைத்து ஏங்கும். இது காந்தியக்காவாய் இருக்கக்கூடாது
, எனக்கு தெரிந்த முகங்கள் இங்கு நிற்கக்கூடாது என்று பலவற்றை மனசு வேண்டி நிக்கும்.

நான் சின்னனாய் இருக்கையில் எங்களை விட்டிட்டு அப்பா இறந்த போது கதிகலங்கிப்போனோம். சிறிது காலத்தின் பின்
அம்மாவும் எங்களை விட்டுப் போன பின். நான் செஞ்சோலையில் தஞ்சமானேன்.
காந்தியக்கா அதற்கு முதலே இயக்கத்தில் சேர்ந்துவிட்டாள். அண்ணாவும் சின்னக்காவும் அடிக்கடி என்னை வந்து பார்த்துச் செல்வார்கள்.
காந்தியக்கா எப்ப எங்கு நிக்கிறாள் என்று எனக்கு தெரிவதில்லை. நான் 'பாண்ட்' வாத்தியக்குழுவில் சேர்ந்ததற்கு முக்கிய காரணம்.
இப்படி எங்கையாவது போகும் போது அக்காவை சந்திக்க முடியும் என்பதால் தான். அப்படித்தான் அடிக்கடி எங்காவது சந்திப்போம்.
அக்கா அங்கு நின்றால் 'பாண்ட்' வாத்தியக்குழுக்களை தேடி வருவாள். சந்திப்போம் எப்போதாவது கடிதம் போடுவாள் என்னையும் பார்க்கவருவாள்.

யார் யார் வீரமரணமானார்கள் என்ற செய்தி என் காதை அடையும் வரை என் தொண்டை வறண்டிருக்கும்.
என் அக்காவாய் இருக்கக்கூடாது என்று மனம் தவிக்கும். எல்லாரும் என் அக்காமார் அண்ணாமார் என்றதை அந்த நொடிகள்
என் மனம் மறந்து போய் நிக்கும். அஞ்சலி செலுத்த வந்திருக்கும் மாவீரர் பெற்றோரை என் கண்கள் அவசர அவசரமாய் தேடும்.
அங்கு சின்னக்காவும் அண்ணாவும் இல்லை என்றவுடன் தான் என் மனம் அமைதியாகும்.
அந்தப் பெற்றோர்கள் கண்ணீர் கண்டு மறுபடி என் மனம் கலங்கும்.
அப்போதெல்லாம் அடிக்கடி சண்டை நடக்கும்... அடிக்கடி புதுக்குடியிருப்பு மாவீரர் துயிலும் இல்லம் மட்டுமன்றி அனேக இல்லங்கள் மலர்களால் நிறைந்திருக்கும்.

இப்படி அஞ்சலி நிகழ்வுகளிற்கு கெஞ்சி மண்றாடி அந்தக் குழுவில் நானும் வந்துவிடுவேன். அன்றும் அப்படித்தான் வந்தேன்.
என் வேண்டுதல்கள் பொய்யாய்ப்போனது. 'வான்' புதுக்குடியிருப்பு மாவீரர் துயிலும் இல்லைத்தை அடைந்ததும். நான் வண்டியை விட்டு இறங்கி விடவில்லை அதற்கு முன்
"கலைமகள் கலைமகள்" எனது பெயர் கீழிருந்து சோதியக்காவால் அழைக்கப்படுவது கேட்டு அவசரமாய் இறங்கினேன். "என்னக்கா ஏன் கூப்பிட்டனீங்கள்"? ஒன்றும் இல்லை " 'கொஸ்டல்' போனேன் நீங்கள் இங்க வந்திட்டதாய் சொல்லிச்சினம்
அது தான் என்று இழுத்தார்". பதட்டத்துடன் "என்னக்கா விசயம்" என்றேன். அதற்குள் ஆயிரம் எண்ணங்கள் என்னுள் உதயமாகி மறைந்து விட்டன.
"உங்கட அக்கா வீரச்சாவு" .................... "வீட்டிற்கும் தகவல் போயிட்டுது" வீட்டில இருந்து ஆக்கள் வந்திருக்க வேணும்.
இதை உங்களுக்கு தெரிவிக்க தான் வந்தனான்". எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார்.

ஒரு நிமிடம் யாவரும் அமைதியானார்கள் என் கண்கள் ஆறாய் பெருக்கெடுத்தது. உள்ளே சென்றேன், ஓடிச்சென்று அக்காவின் முகத்தை பார்த்துவிட என் மனம் ஏங்கியது.
அருகில் சென்றேன் இன்று இங்கு வந்திருக்கவே வேண்டாம் என்று என் மனம் அழுதது.
சின்னக்கா விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தாள் அண்ணாவின் கண்களும் தான் கலங்கிக்கொண்டிருந்தன. எப்பவும் காந்தியக்காவோடு
கூடியிருக்கும் புன்னகை இன்றும் அவளை விட்டு விலகிவிடவில்லை. முகம் கறுத்துப்போய் இருந்தது. என்னைக் கண்ட சின்னக்கா கட்டிப்பிடிச்சு அழுதாள்.
அண்ணா என்ன செய்வார். அவரும் தான். இடையில் ஒரு குரல் " கலைமகள் பிரச்சனை இல்லை நீங்கள் அஞ்சலியைச் செலுத்துங்கோ நாங்கள் ஆளொரால் கூப்பிடிறம் என்றார் சோதியாக்கா". நூற்றுக்கணக்கான அக்காமார் அண்ணாமாருக்கு 'பாண்ட்' வாசிச்ச நான் என் அக்காவை மட்டும் எப்படி தவிர்த்து விடமுடியும்.

"இல்லை அக்கா பிரச்சனையில்லை நான் வாசிக்கிறன். அதை விட சிறந்த அஞ்சலி வேறெது" சொல்லி விட்டு நிமிர்ந்தேன். வார்த்தைகள் இன்றி
முதுகை தட்டி விட்டு விலகினார் சோதியக்கா. அதன் பிறகு இங்கு வரும் வேளை பதட்டங்கள் தேடல்கள் இருப்பதில்லை. கண்மட்டும்
கல்லறையோடு ஏதோ பேசும். காந்தியக்கா என் கண்ணீரோடு உணர்வால் பேசுவாள் இங்கு தானே விதைக்கப்பட்டிருக்கிறாள். என் அக்காவாய்
இருக்கக்கூடாது என்ற நிலை மாறி எல்லா அக்காக்களுக்குமாய் மனம் அழும் அஞ்சலி செலுத்துவேன்.

3 Comments:

Blogger U.P.Tharsan said...

அருமை!!! இதைத்தவிர வேறு ஒன்றும் எனக்கு சொல்லத்தெரியவில்லை.

November 25, 2005 1:37 PM  
Blogger சினேகிதி said...

enna Kayalvizi ippidi ala vachitingale..ungaluku captain mathyalaganai theriuma?

November 25, 2005 5:51 PM  
Blogger கயல்விழி said...

கருத்துக்களுக்கு நன்றிகள். இல்லையே சினேகிதி எனக்குத்தெரியாது. :))

November 26, 2005 12:18 PM  

Post a Comment

<< Home

free hit counter