Sunday, August 20, 2006

சுமைகளும் சுகங்களும் பகிர்வதில் சுகமே...! - சிறுகதை

அதிகாலை நான்கு மணியில் இருந்து தன்னந்தனியாக சுழன்று கொண்டிருந்த சுமதிக்கு எரிச்சல், கோவம் எல்லாம் ஒன்றாய் கொழுந்து விட்டு எரிந்த கொண்டிருந்தது. இரவு நித்திரையில்லை குழந்தை உறங்க 1 மணி ஆகிவிட்டது.

“என்ன செய்வது என் கஸ்டம் எப்ப தீருமோ.? அப்பவே சொன்னான் பாழாய்ப்போன கலியாணம் எனக்கு வேண்டாம் என்டு கேட்டுதுகளே.. பாரம் இறக்கி வைக்கிறம் என்டு பாழுங்கிணத்துக்கை தள்ளி விட்டிட்டு அவை சந்தோசமாய் இருக்கினம். நான் படுற பாடு எனக்குத்தானே தெரியும்.” தன் சோகங்களை தனியாகவே புலம்பிக்கொண்டு வேலைகளை செய்தவளிற்கு குழந்தையின் அழுகையை கேட்டதும் கோவம் கொழுந்து விட்டெரிந்தது. .

“ சுமதி இங்க கொஞ்சம் வாரும்.. பிள்ளை ஒண்டுக்குப்போட்டுது போல அழுகுது” நித்திரை கலையாத ரவியின் குரல். “அதுக்கும் நானே வரோணும் பக்கத்தை எல்லாம் கிடக்கு எடுத்து மாத்துங்கோ” ரவியின் உடுப்புகளை அயன் பண்ணியபடி பதில் தந்தாள் சுமதி. “இங்க வந்திட்டுப்போம். என்னால முடியாது” என்ற படி மறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டான் ரவி. இதைக்கேட்டதும் சுமதிக்கு அழுகையே வந்தது.

கலியாணத்திற்கு முன்னர் “உன்ரை அம்மாமாதிரி நான் உன்னை கவனிப்பன்” என்று வாக்குறுதியை வழங்கிய ஆண்மகன் ரவி. பிள்ளைக்கு ‘நப்பி’ மாத்திறது, பிள்ளை வண்டி தள்ளுறது இதுகளை பெண்கள் வேலையாகவும், வீட்டுவேலைகள் யாவும் பெண்களே செய்யவேண்டும் என்ற சிந்தனை கொண்ட படித்த இளைஞன்.

குழந்தையின் அழுகை நிண்டபாடில்லை அது அழுது கொண்டிருக்க தாய்க்கு வேலை ஓடுமா? அப்படியே போட்டுவிட்டு படுக்கையறை சென்று குழந்தையை பார்த்து அழுகையை நிறுத்தி பாலும் கொடுத்துவிட்டு வந்தாள்.

ரவியைப்பார்க்கையில் வேதனையாக இருந்தது..
“என்னை ஒரு மிசினாக நினைச்சிட்டாரோ” தனக்குள் கேள்வியை கேட்டுக்கொண்டு மறுபடி புலம்பலை ஆரம்பிக்கிறாள். தினமும் தனியனாய் 4 மணிக்கு எழும்பி.. பள்ளி செல்லும் பிள்ளை, வேலைக்குப்போகும் கணவன், இவைகளின் அன்றாட வேலைகளையும் செய்து, தனது வேலைகளும் செய்து.. அயன் பண்ணி, சமையல் செய்து, குளிக்கவைத்து, சாப்பாடு பரிமாறி, தான் வேலைக்குச்சென்று மறுபடி வந்து குழந்தைகளை அழைத்து, வீட்டு வேலைகள் பார்த்து நித்திரைக்குப்போக 10-11 ஆகிவிடும். அதிகாலை 4 மணிக்கு எழுந்தால் தான் அனைவரையும் சரியாக கவனித்து 8 மணிக்கு தானும் வேலைக்கு போகலாம். கணவனிடம் இருந்து எந்த உதவியும் ஆதரவும் இன்றி தன்னந்தனியாக சுழலும் அவளது மன உளைச்சலையும், சுமையையும் பங்கிட அவன் தயாராக இல்லை.

அவனைப்போலத்தான் அவளும் வேலைக்குச்செல்கிறாள் உழைக்கிறாள்.. ஆனால் அவளுக்குமட்டும் குடும்பத்தில் சுமை ஏன் அதிகம்..?? வீட்டு வேலைகள் பெண்கள் வேலையாம் அதைச்செய்ய வெட்கப்படும் அவன்

“நான் பொட்டையன் இல்லை உதுகள் செய்ய”

என்பான். உதவி கேட்டால் தேவையில்லாத பிரச்சனை

“ என்ன நீர் தான் பெரிய வேலைக்குப்போற பொம்பிளை மாதிரி தினம் படம் காட்டிறீர்.. உங்க மற்றவை போறதில்லையோ..?? பிள்ளையளை கவனிச்சுக்கொண்டு எங்கட அம்மாமார் வீட்டு வேலை செய்யலையோ.?? உமக்கு வேறை வோசிங் மிசின், காஸ் அடுப்பு இப்படி நிறைய வசதிகள் கிடக்கு அவை எவ்வளவு கஸ்டப்பட்டவை” என்று பேசுவான்.

“ ஏனப்பா என்னை மாதிரி அவையும் வேலைக்குப்போனவையோ.. 24 மணிநேரம் வீட்டில இருந்தவை செய்திச்சினம் நான் வேலைக்கும் போய் இங்கையும் மிசினாய் வேலை செய்யவேண்டியதாய் எல்லோ கிடக்கு, வோசின் மிசினுக்க உடுப்பு போடாமல் தானாய் தோய்க்குமே.. அடுப்பில காய்கறியளை வெட்டி வைக்காமல் தானாய் காய்ச்சுமே..?? அதுக்கு தான் உதவி வேணும் எண்டிறன். நான் என்ன மிசினே வீட்டிலையும் மாடாய் வேலைசெய்து ஒபிசிலையும் வேலை செய்து கஸ்டப்பட” அவளும் கேட்காமல் இல்லை..

அவளது பேச்சிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அவனை விட அவள் எந்த விதத்தில் உயர்ந்தவள் அல்லது எந்த விதத்தில் தாழ்ந்தவள். 2 வேலை செய்ய அவனால் முடியாதவிடத்து அவளால் எப்படி முடியும். குடும்பம் அவளுடையது, குழந்தைகள் அவளுடையது அதற்காக தனியாக கஸ்டப்பட முடியுமா.?

சுகங்களை பகிரும் துணைவன் சுமைகளையும் பகிரும் போது தானே அவளுக்கும் மகிழ்ச்சி. அவனும் ஒரு கை கொடுத்தால். 4 மணிக்கெழும்பி 8 மணிவரை சுடுதண்ணியாய் கொதிப்பவள். சற்று தாமதமாய் எழுந்து பிள்ளைகளையும் கவனிச்சு சந்தோசமாய் ஆரோக்கியமாய் இருக்கலாம் தானே. இது அவளது கேள்விகள்.

அவன் அதை உணர்ந்ததாய் தெரியவில்லை. எத்தனை நாள் தான் வாய்விட்டுக்கேட்பது அது தான் தனக்குள் புலம்புகிறாள். மணி 7 அடித்துவிட்டது. 6.30 க்கே பிள்ளைகளை எழும்பி குளிக்க வைத்து தயார்படுத்திவிட்டாள். தானும் தயாராகிவிட்டாள். 7 அடித்ததும் ரவி படுக்கையை விட்டு எழுந்தான்.

“உடுப்புகள் றெடியா”.. எந்த சேட் அயன் பண்ணினீர்”. அதற்குள் ஆயிரம் கேள்விகள்.

“ ஏன் நீங்களும் பேபியே, அயன்போட்ல கிடக்கு போய்ப்பாருங்கோ.. பிடிக்காட்டால் திரும்ப அயன் பண்ணுங்கோ.. அவள் பதில் சொல்லிவிட்டு பிள்ளைகளை அதட்டி உணவு ஊட்டிக்கொண்டிருந்தாள். ரவி குளித்து முடித்து வந்து மேசையில் வைத்திருந்த தேனீர்க் கோப்பையை தூக்கியபடி சென்று தொலைக்காட்சிப்பெட்டிக்குள் தன்னை நுழைத்துக்கொண்டான்.

அழைப்பு மணி அலறியது.

“கதவைத்திறக்கிறியளே” என்று குரல் கொடுத்தாள் “ போய்த்திறவும் உமக்குத்தான் ஆக்கள் வந்திருப்பினம்” என்றான் ரவி. அவனை முறைத்துப்பார்த்தபடி கதவைத்திறந்தாள் சுமதி. வாசலில் நின்றது பக்கத்துவிட்டு சுந்தரி..

“ வாங்கோ என்ன சுந்தரியக்கா இந்த நேரம்..” ஆச்சர்யமாக கேட்டாள். ஏனெனின் சுந்தரியும் இப்ப அவசரமாய் வேலைக்கு கிளம்பிக்கொண்டிருக்க வேண்டியவள். “ஒரு உதவி கேக்க வந்தனான் சுமதி” என்றாள சுந்தரி.

“என்னக்கா சொல்லுங்கோ” கருசனையோடு வினவினால் சுமதி.

“என்னெண்டால் கண்ணன் நேற்றொரு சின்ன கார் விபத்தில கொஞ்சம் காயப்பட்டிட்டார். இரவு ஒரு பாட்டியால வரேக்க நடந்திருக்குது அது தான் நீங்கள் உங்கட பிள்ளையளை பள்ளிக்கூடம் கூட்டீட்டு போகேக்க கபிலனையும் கூட்டீட்டுப்போறியளே? எனக்கு கொஞ்சம் வேலை கிடக்கு.. வழமையா அவர் பிள்யைளை வெளிக்கிடுத்த நான் சமைக்கிறனான்.. அவர் பிள்ளையளை கொண்டே விட்டிட்டுவர நான் வெளிக்கிட்டிடுவன் போகலாம்.

இண்டைக்கு இரவு கண் முழிச்சது என்னால வெள்ளெனவும் எழும்ப முடியேல்லை. பாவம் கண்ணன் நான் சமைக்காமல் போனால், பிறகு நாங்கள் வந்து அவசரப்படுவம் எண்டு ஏலாததோட எழும்பி சமைச்சு கஸ்டப்படுவார். அது தான் இவனை உங்களோட விட்டால் நான் சமைச்சு வைச்சிட்டு என்ர நேரத்துக்குப்போவன். உங்களுக்கு ஏலும் என்டால் சரி இல்லாட்டால் நான் கடையில எடுத்து வைச்சிட்டுப்போப்போறன்” என்று முடித்தாள் சுந்தரி.

“சே பிரச்சனையில்லை அக்கா இவை இரண்டு பேரும் இப்ப தயாராகிட்டினம் நான் போகேக்க கூப்பிடிறன் கொண்டு வந்து ஏத்திவிடுங்கோ. பின்னேரமும் நான் கூட்டீட்டுவாறன். கண்ணன் அண்ணைக்கு நல்லாகும் மட்டும் நான் கூட்டீட்டுப்போறன் அக்கா நீங்கள் கஸ்டப்படாதேங்கோ” என்ற சுமதி பெருமூச்சுத்தான் விட முடிந்தது.

சுமதிக்கு ஒரு விதத்தில் சுந்தரிமேல் பொறாமை தான். இயலாத நேரத்திலும் கண்ணன் அண்ணை அவாக்கு உதவி செய்ய நினைக்கிறார். அவர் கஸ்டப்படக்கூடாது என்று மனைவி எப்படித்துடிக்கிறா இதெல்லோ வாழ்க்கைத்துணை என்ற சொல்லிற்கே அழகு. இனி என்ன செய்வது மெளனமாய் விட்டுவந்த பாதி வேலையை தொடரச்சென்றாள் சுமதி.

ம் ஒற்றுமையாய் வாழுற அந்த குடும்பத்திற்கு இந்த உதவியை ஆவது செய்வமே என்று புறுபுறுத்த படி பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு பாடசாலை சென்றுவிட்டாள் சுமதி. மறுநாள் வழமையை விட சற்று முன்னரே எழும்பிய ரவி.. தன் வேலைகளை தானே செய்யலானான்.. அப்படியே பிள்ளைகளையும் கவனித்தான். அத்தோடு நின்று விடாமல். “சுமதி நான் வேணும் என்றால் இன்டைக்கு பிள்ளையளை கொண்டே விட்டிறன். நீர் வரேக்க கூட்டீட்டுவாருமன்.” என்றான் ரவி.

சுமதிக்கு ஒரே ஆச்சர்யம் என்ன இண்டைக்கு சந்திர சூரிய கிரகணம் ஏதுமே என்று முழித்தாள்.

“என்ன லூசு மாதிரி முழிக்கிறீர்.. இல்லை நேற்று சுந்தரி கண்ணனுக்கு சுகமில்லை என்ற உடனை வழமை குழம்பி கஸ்டப்பட்டு உன்னட்டை உதவி கேட்டு வந்திட்டா.. அவனுக்கு ஒன்று என்றதும் அவவின்ர நாளாந்த வாழ்க்கையில இத்தனை மாற்றம். ஆனால் எனக்கு ஒன்டென்றால் உனக்கு எந்த மாற்றமும் இருக்காதே. நான் நல்லாய் இருக்கும் போது கூட.. நலமற்றவன் மாதிரி நடந்திருக்கிறனே, இனியாவது கொஞ்சம் சுமப்பம்.

"என் குடும்பச்சுமைகளை சுமப்பதில் சுகம் காணுவம்” என்றபடி கண் சிமிட்டினான். அவனது பேச்சைக்கேட்க பாவமாய் இருந்தது சுமதிக்கு. இருந்தாலும் அது தானே உண்மை. சுகதேகியான அவன் இத்தனை நாளும் அவளில் சார்ந்தல்லவோ இருந்தான். குழந்தைகளோடு அவனையும் சேர்த்தல்லவோ அவள் சுமந்தாள். “சரி ரவி நீங்கள் கூட்டிக்கொண்டு போங்கோ நான்.. அடுப்பிலை வைச்சதுகளை இறக்கி வைச்சிட்டு ஆறுதலாய்ப்போறன்”. என்ற அவளின் வார்த்தையில் ஒரு தெளிவும் குளிர்ச்சியும் நிறைந்திருந்தது அதை கவனித்த போது அவனுக்கே உறைத்தது. இனியாவது விடிய விடிய வீட்டில வெடி விழாமல்.. அமைதியாய் நாட்கள் மலரட்டும் என்று கூறி பிள்ளைகள் கையைப்பிடித்தான்.

free hit counter