Tuesday, September 06, 2005

காதலில் காதல்.! (2)

ஒரு சித்திரை வருடப்பிறப்புக்கு கிட்ட ஒரு நாள் ராதிகா பாடசாலை ரியூசன் எங்கும் வரவில்லை கணேஸைத்தேடினேன் அவனையும் காணமுடியவில்லை. உண்மையில் இந்த சித்திரைப்பொங்கலுக்கு அவளை எனது வீட்டிற்கு எப்படியாவது கூட்டிட்டுப்போய் அறிமுகப்படுத்துவது என்று இருந்தேன். விதி வேறுவழி விளையாடியது. ராதிகாவின் அப்பாவிற்கு விசம்கலைச்சு அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாய் எங்கள் தலைமை ஆசிரியர் சொன்னார். எனக்க சரியான கஸ்டமாய் இருந்தது. உடனையே அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தேன்.

கணேஸின் மடியில் ராதிகா மயங்கியநிலையில் இருந்தாள். கணேஸ் கூட கனநேரமாய் அழுதிருக்கிறான். கண்கள் சிவந்திருந்தன. என்னைக்கண்டதும் மறுபடி கண்கலங்கியது. நான் அவனைத்தேற்றினேன். ராதிகாவை அந்த நிலையில் பாத்த எனக்கு தாங்க முடியவில்லை. என்க்கு அழுகையே வந்துவிட்டது. அதுதான் காதலோ என்று பின்னர் நினைத்தேன். அந்த நிகழ்வோடு எனது வாழ்க்கை மட்டும் அல்ல ராதிகாவின் வாழ்வும் தான் மாறிப்போய் விட்டது.

கணேஸ் உறவினர் ஒருவரின் உதவியுடன் வெளிநாடு செல்வதற்கென கொழும்பு சென்றுவிட்டான். உறவினர்கள் தெரிந்தவர்கள் என்ற யாருமே இல்லாத ஊரில் இருப்பதற்கு பிடிக்காமல் ராதிகாவும் தாயாரும் திரும்பவும் யாழ்ப்பாணம் சென்று விட்டனர். இவை எல்லாம் ஒரு சில கிழமைகளில் நடந்தேறின. கடைசியாக ராதிகா என்னோடு பேசிய போது அவள் இருந்த சோகத்தில் காதல் சொல்ல வேண்டும் என்று எனக்கு தோன்றவே இல்லை. அதோடு ராதிகாவிற்கும் எனக்கும் இடையிலான தொடர்புகள் அற்றுப்போயின.

எனது தலைமை ஆசிரியரிற்கு ராதிகாவிடம் இருந்து கடிதம் வந்ததாக அடிக்கடி சொல்வார். எங்களை எல்லாம் நலம் விசாரித்திருந்ததாகவும் சொல்வார். அருகில் இருந்தவர்கள் என்னை ஒருவாறு பரிதாபகமாக பார்ப்பார்கள். நான் பல தடவை தலையைக்குனிந்த படியே இருந்திருக்கிறேன். அவளது நலங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. அதன்பிறகு எப்பவாவது வரும் கடிதங்களும் நிண்டு போயிருந்தன.

ஐந்தாறு வருடங்களின் பின்னர் வந்த கடிதத்தில் ராதிகாவிற்கு திருமண ஆயத்தங்கள் செய்து கொண்டிருப்பதாக செய்தி வந்தது. ராதிகா ஏல் படிக்கும் போது ஏற்பட்ட பழக்கமாம் அது காதலாகி பின்பு இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் முடிந்து விட்டதாகவும். ராதிகா ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் பயிற்சியில் இருப்பதாகவும். அவளது கணவன் ஒரு கணக்காளன் என்ற செய்தியும் கீடைத்தது. கூடவே அவளது திருமணப்படமும் அனுப்பப்பட்டிருந்தது, வழக்கம் போல ஆசிரியர் எனக்கு கொண்டு வந்து காட்டியிருந்தார். அவரின் அனுமதியுடன் அதிலும் ஒரு படம் எடுத்து என்னோடு வைத்துக்கொண்டேன். இதற்கிடையில் ராதிகா சிவபுரம் விட்டு சென்ற அடுத்த ஆண்டே கிளிநொச்சி இயக்கத்தின் கதையில் வந்த உடனே எனது குடும்பத்தாரும் அங்கு போய்விட்டார்கள். நான் மட்டும் வரமாட்டேன் என்று உறுதியாக இங்கேயே இருந்து விட்டேன்.

நான் படிச்ச அந்த பள்ளிக்கூடம், கல்வி நிலையம் என்று அவளது நினைவு சுமந்த அந்த இடத்தில் இருந்து விட்டேன். வீட்டில் இருந்து அம்மா, அக்கா அடிக்கடி வந்து போவார்கள். என்னையும் கிளிநொச்சி வரும்படி வற்புறுத்துவார்கள். நான் அந்த கல்லிநிலையத்திற்கு அருகில் ஒரு கடை போட்டுக்கொண்டு அதோடையே என்ர காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். இன்றும் அம்மா வந்திருக்கிறா. பெண் பாத்து வந்திருப்பா படம் கொண்டு வந்திருப்பா. வழக்கம் போல நான் வேண்டாம் என்று சொல்லுவேன். அம்மா அழுதபடி வீடு திரும்புவா. இது தொடர்கதையாகப்போய்விட்டது.

அவள் என்னைக்காதலிக்கவில்லை, எனக்கு கிடைக்கப்போவதில்லை என்ற எண்ணங்கள் என்னை வருத்தியதில்லை. எனது காதலில் எனக்கு பூரண திருப்தி. அவளை உண்மையாக நேசித்தேன் என்பதில் எனக்கு சந்தோசம். என்னோடு அதிக காலமாய் பழக்கம் வைத்திருக்கின்ற எங்கள் கல்விநிலைய தலைமை ஆசிரியர் பலதடவை எனக்கு அறிவுரை கூறியிருக்கிறார். அம்மாவின் வேண்டுதலால். யார் சொல்லியம் இதுவரை என்னுள் மாற்றம் ஏற்படவில்லை. கடந்த வருடம் எங்கள் எல்லாரையும் பார்ப்பதற்கென்று ராதிகா சிவபுரம் வந்திருந்தாள். எதிர்பாராத தரிசனம். அவளில் பெரிய மாற்றங்கள். குணம், துடுக்கான பேச்சு எதுவும் மாறவே இல்லை. என்னைப்பொறுத்தவரை அவள் இன்னும் அப்படியே தான் இருந்தாள். என்னோடு நன்றாக பேசினாள். அவளது கணவனுக்கும் அறிமுகப்படுத்தியிருந்தாள். அவளது சாமத்தியவீட்டு வீடியோவில் என்னைப்பாத்ததாக சொல்லியிருந்தார். என்னை நேசிச்ச பல ஜீவன்கள் வாழ்ந்த வாழ்கின்ற இடம் மீண்டும் ஒருமுறை தரிசிக்க வந்ததாய் சொல்லியிருந்தாள். அதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை. என்னைப்பற்றி கதைத்தார்கள். ஏன் திருமணம் செய்யவில்லை என்று கேட்டாள். நான் பதில் பேசவில்லை.

தலைமை ஆசிரியர் பேசினார். "ஓரு பிள்ளையைக்காதலிச்சவனாம், அந்தப்பிள்ளையட்ட காதலைச்சொல்லேல்லையாம். அது ஊருக்கு போயிட்டுது. இப்ப கலியாணமும் செய்திட்டுது என்றார். இவன் இன்னும் இப்படியே இருக்கிறான். சரியான விசரன். என்ன சொல்லியும் கேக்கிறான் இல்லை ராதிகா". என்றார்.

அவளும் அவளது பாட்டிற்கு. " ஒருதலைக்காதலிற்கு இத்தனை காத்திருப்பா. உங்களுக்கு என்ன பைத்தியமா? நீங்க காதலிச்சவங்க கொடுத்து வைச்சவங்க. உங்கள தவறவிட்டிட்டாங்களே" என்றாள். நான் அந்த கொடுத்துவைச்சவள் நீ தான். என்று சொல்லவழியின்றி. ஆசிரியரைபப்பாத்தேன். அவரது கண்கள் என்னை பாவமாய் பாத்தது. என்கண்கள் ஏனோ கலங்கியிருந்தது. எனது கண்களை கண்ணீருடன் கண்ட ராதிகாவின் கணவன். " சும்மா இருடா ராதி, பாவம் அவர் கஸ்டப்படுத்தாதே" என்று அவளை கட்டுப்படுத்திக்கொண்டார்.

அவர்கள் சிவபுரத்தில் இரண்டு கிழமைகள் தங்கியிரந்தார்கள். கோவில்கள் பள்ளிக்கூடம் என்று எல்லா இடமும் சுற்றிப்பார்த்தார்கள். எனது வீட்டிற்கும் ஒரு நாள் விருந்துக்கு அழைத்திருந்தேன். நான் தனியாக சமைப்பதை கண்ட ராதிகாவும் அவளது கணவனும் எனக்கு உதவி செய்தார்கள். வீட்டிலும் இப்படித்தானாம். ராதிகாவை தனியாக சமைக்க விடுறதில்லையாம். வாழ்க்கையின் பலனை அடைந்த மாதிரி உணர்வு.

ராதிகாவை அவளது கணவன் ஒரு குழந்தை போல பார்த்துக்கொண்டான். தொலைவில் இருந்து பார்த்தேன். முகம் கழுவும் போது சட்டையை நனைத்துவிட்டாள் என்று பேசினான். அவளிற்கு சளிப்பிடித்துவிடுமாம். அக்கறையோடு சண்டை போட்டான். "சரிடா சரி வீட்டை மாதிரி இங்கையும் தொடங்காதே, பாக்கிறவை தப்பாய் நினைக்கப்போயினம். நான் என்ன குழந்தையா? உனக்கு பொண்டாட்டியாக்கும் நினைவில வைச்சுக்கொள்" அதே வாய் அவனை செல்லமாய்ச்சீண்டி அடக்கியது. அவனும் "வீட்டை வாம்மா பாத்திக்கிறேன்" என்று சிரித்தான். நான் கூட இப்படி அவளை கண்ணும் கருத்துமாய் பாத்திருப்பேனா சந்தேகம் தான். என்னை விட சிறந்த ஒருவன் அவளிற்கு கணவனாய் கிடைத்ததை இட்டு மிகமகிழ்ந்தேன்.

போகும் போது ராதிகா அக்கறையோடு சொல்லிச்சென்றாள். "உங்கட காதலி இன்னொருதரை மணந்த பின்னும் அவளுக்காக நீங்க உங்கள் வாழ்க்கையைப்பாழாக்கிறது நல்லாய் இல்லை. யோசிச்சு செய்யுங்க உங்களுக்கு புத்தி சொல்ற அளவிற்கு எனக்கு அநுபவம் இல்லை. மீண்டும் உங்களை எல்லாம் காணக்கிடைக்குமோ தெரியாது. அப்படி கிடைச்சா கண்டிப்பா உங்களுக்கென்று ஒரு வாழ்க்கை அமைஞ்சிருக்க வேணும் என்று கடவுளிட்ட வேண்டுறன். அது தான் என்னால் இப்போதைக்கு முடிந்தது" என்று கூறிச்சென்றாள். அவளது கண்ணிகளிலும் கண்ணீர் காரணம் எனக்கு தெரியவில்லை. ஏன் அழுதாள்? என்மேல் அக்கறையா? எதுக்கு? அல்லது என் காதலை அறிந்து கொண்டாளா? எப்படி?
இதற்க விடை என் ஆசிரியரிடம் கிடைத்தது.

ராதிகா சிவபுரம் வந்ததற்கு காரணமே அவர் அனுப்பிய தகவல் தானாம். எனக்காக வரவழைத்திருக்கிறார். சகலவிடயமும் அவளிற்கு தெரிந்திருந்திருக்கிறது. அதனால் தான் கணவனுடன் வந்து தான் மணம் முடித்ததை தெரியப்படுத்தி என்னையும் மறந்து வேறை யாரையும் மணக்கச்சொல்லியிருந்தாள். எனக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது இதைக்கேக்க. எனக்காக அவள் கவலைப்படுறதை நான் விரும்பவில்லை. எனக்கு கலியாணம் செய்யப் பிடிக்கவில்லை. அதற்காக இப்ப ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். எனக்கு திருமணம் என்று கூறிவிட்டு சிவபுரத்தை விட்டு வெளியேறப்போகிறேன். தலைமை ஆசிரியர் மூலம் ராதிகாவிற்கு இந்த தகவலும் கட்டாயம் போகும். என்னால் காதலிக்கப்பட்ட குற்றத்திற்காக அவள் வருந்துவது எனக்கு விருப்பமில்லை. ஊர் விட்டு மாறப்போறேன். என்வாழ்வில் மாற்றம் வருமா? எனக்கு இந்த நிமிடம் வரை தெரியாது.

முற்றும்.

0 Comments:

Post a Comment

<< Home

free hit counter