Monday, January 16, 2006

ஒரு விவசாயின் ஏக்கம்.

"எனை அம்மா உவர் எங்கட மானத்தை வாங்காமல் இருக்க மாட்டாராமோனை"

மோட்டார் வண்டியை விட்டதும் விடாததுமாய் எனது இளைய மகனின் வார்த்தைகள் என்னைக் குறிவைத்தன.

"ஏன்டா நடு இராத்திரியில பே மாதிரி உவடம் எல்லாம் அலைஞ்சு போட்டு வந்து சிவனே என்றிருக்கிற அந்த மனிசனை வம்புக்கிழுக்கிறாய்.. என்னடா பிரச்சனை?, என்ன நடந்தது? "

எனது மனைவியும் தன்பங்கிற்கு கேள்வியை அடுக்குகிறாள்.

"உன்ர மனிசனுக்கு வேறை வேலை என்ன? அதுகள் சுளை.. சுளையா பணம் அனுப்புதுகள் செலவு செய்து கொண்டு சும்மா இருக்கிறதுக்கு. குளத்தடி ஆலமரத்திக்கு கீழ இருந்து புலம்பல், இவருக்கு சிநேகிதங்கள் வேறை ஆமாப் போட்டுக்கொண்டு, பக்கத்தால போனவங்கள் கேட்டிட்டு வந்து நக்கலடிக்கிறாங்கள்."

மதியம் மரத்தடியில் சிநேகிதர்களுடன் நான் பேசினதை எவனோ கேட்டுக்கொண்டு போய் பத்தவைச்சிட்டான். என்ர வேதனையைப்புரிய யாருமே இல்லை இப்ப அமைதியாய் இருக்கிறது தான் எனக்கு நல்லது.

"ஏன்டா அவர் புலம்பினதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தமாடா?? ஏன்டா நீ புலம்புறாய் இப்ப??"

என்ர மனைவியும் அவனை விடுவதாய் இல்லை.

"ஓமனை ஓம் உன்ர மனிசன் பெரிய உளைப்பாளி, விவசாயி அவருக்கு பட்டங்களை கொடுத்துக் கொண்டே போகலாம், அந்த விவசாயம் எத்தனை நாள் எங்களுக்கு வயித்திற்கு அரை வயிற்குச்சாப்பாடு போட்டது. அவரால சும்மா இருக்கேலாதாம் ஓடியாடி வேலை செய்த உடம்பாம் சும்மா இரு என்ட சாக்குப்பத்திப்போச்சாம். கால்வயிறு கஞ்சி குடிச்சாலும் குனிஞ்சு நிமிந்து உளைச்சுக்குடிக்கிறது போல வராதாம்... பிள்ளையள் அனுப்பிறதில சாப்பிட கூசுதாம் கேளன் பின்ன. அவனவன் உளைச்சுத்தர அளில்லையே என்று அழுகிறான் இவருக்கு சும்மா இருந்து சாப்பிட முடியேல்லை" அடுக்கிக்கொண்டே போகிறான் மகன். சின்னப்பிள்ளை என்று செல்லம் கொடுத்தது தப்பாய்ப்போச்சு. காணாததிற்கு தமக்கை தமையன் என்று வெளிநாட்டில இருந்து காசனுப்ப கண்ட படி பேசவும் வெளிக்கிட்டிட்டான். தகப்பன் கிள்ளுக்கீரையாய்ப்போயிட்டன்.

"அட பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில ஏறுது போல.. சரி மோனை நீ வா சாப்பிட " அத்தோடு என்ர மனைவி அமைதியாகிவிட்டாள்.

நாளையிண்டைக்கு தைப்பொங்கல். நான் ஒரு விவசாயி என்ர நிலத்தில் ஏர் எடுத்து மாடு பூட்டி உழுது தான் எங்கள் குடும்பம் வாழ்ந்தது. அது தான் எங்கள் முக்கிய தொழில் எனக்கு ஜந்தாறு பிள்ளைகள் எனது உளைப்பு குடும்பச்செலவிற்கே சென்று விடும் வறுமை தான் யாருக்கில்லை?? கஸ்டப்பட்டுத்தான் வளர்த்தனான் எவ்வளவு கஸ்டப்பட்டாலும் படிப்பை நிறுத்தவில்லை. கால் வயிறு கஞ்சி கொடுத்து புத்தகங்கள் வாங்கிப்படிக்க வைத்திருக்கிறன். அப்ப எல்லாம் தாழ்வாய்ப்படாத விவசாயம் இன்று என் பிள்ளைகளுக்கு மதிப்பற்ற ஒன்றாகிவிட்டது. இவை எல்லாம் ஒரு நேரம் என்னொட கூட நின்று பாத்தி கட்டின ஆக்கள் இப்ப சேறு காணாதவை போல எட்டி நடக்கினம். எனக்கோ வயிறு பத்தியெரியுது.

எனது மூத்தமகளிற்கு வெளிநாட்டில் இருந்து வந்த சம்பந்தத்தால் அடுத்தடுத்த பிள்ளைகளும் வெளி நாடு செல்லும் அளவிற்கு எங்களுக்கு நிலமை மாறிவிட்டது. மகிழ்ந்தேன் எங்கள் வாழ்க்கை முறை மாறியது சாதாரன மண் குடிசையில் வாழ்ந்த நாங்கள் 5..6 அறையில் வீடு கட்டினோம் இன்னும் மகிழ்ச்சி தான். ஆனால் செல்வம் வந்த உடன் விவசாயம் ஏன் இனி அதை விட்டு விடச்சொல்லி என் பிள்ளைகள் சொன்ன போது நான் ஆடிப்போய்விட்டேன். அவர்களது அறியாமையை தீர்த்து வைக்க என்னால் முடியவில்லை. விவசாயம் செய்து சாப்பிடிற அளவில அவையில்லையாம். பிள்ளையள் வெளிநாட்டில தகப்பன் வயலுக்க என்று சனம் பழிக்குமாம் சனத்தி . செல்வம் வந்த உடன் விவசாயம் அவர்களிற்கு கசந்தது எப்படி..?? விவசாயி என்பவம் தாழ்வானவனா..?? என்னைப்போல் விவசாயிகள் சேற்றில் இறங்கி ஏர் பிடிக்காவிடின் எந்த செல்வந்தனும் உயிர் வாழமுடியுமா..?? அதை உணர மறுக்கின்ற என் பிள்கைள். எங்கள் ஊரில் இது தற்பொழுது நாகரிகமாகிவிட்டது குடும்பத்தில் ஒருவராவது வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவர்களது பணம் இங்குள்ளவர்களை தலைகால் தெரியாது ஆட வைக்கிறது. நாள் ஒரு உடுப்புடன் மோட்டார் வண்டியில் சுற்றித்திரியும் என் இளைய மகனிற்குக்கூட நான் விவசாயம் செய்வது கெளரவக்குறைவாய் போய்விட்டது. இதை எடுத்துச்சொல்ல என் மனைவியோ.. " ஏனப்பா நீங்கள் உளைச்சு சாப்பிடிற நிலையில யாரும் இல்லை வயசு போன நேரத்தில ஏன் கஸ்டப்படுறியள் பேசாமல் உங்கின படுங்கோ"...

தரிசி பற்றிப்போனது என் நிலம் மட்டும் அல்ல என் மனசும் தான். அறியாமையில் மூழ்கியிருப்பது எழுதப் படிக்கத்தெரியாதா நானா..?? இல்லை நாலெழுத்துப்படித்து இன்று நல்ல நிலையில் இருக்கும் என் பிள்ளைச் செல்வங்களா எனக்கு புரியவில்லை. தைப்பொங்கல் பொங்க தடல் புடலாய் ஆயத்தங்கள் நடக்கின்றன எதற்கு?? ஒரு உண்மை விவசாயின் உணர்வுகளைப்புரிய மறுக்கும் இவர்கள் வெறும் சம்பிரதாயத்திற்காக பொங்கல் கொண்டாடி என்ன பயன்..?? என்னுள் பெருமூச்சுத்தான் இதை பலதடவை இவர்களிற்கு புரியவைக்க முயன்றும் என்னால் முடியவில்லை பலதடவை அவமானப்பட்டுப்போனேன் இன்று என்மகன் வந்து பேசிய தொனியைப்பார்த்தீர்கள் தானே விவசாயம் பற்றி நான் கதைத்தால் என் நிலை இது தான்.?? நாலு பேருக்கு அன்னம் போடும் ஒரு விவசாயின் வீட்டில் இருந்து அரிசிவாங்க கடையேறும் மனைவியும் பிள்ளைகளையும் காண்கையில் எப்படி ஒரு விவசாயின் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.? இந்த தைப்பொங்கலை எப்படி நான் மனமகிழ்ந்து கொண்டாடமுடியும். எனது சொந்த நெல்லை அறுத்து அதில் பொங்கிப் படைப்பதில் உள்ள சுகம் இனி ஒரு முறை என்னைச்சேருமா ஏக்கம் தான் மிச்சம்....??

0 Comments:

Post a Comment

<< Home

free hit counter