Saturday, October 15, 2005

நம்பிக்கை தந்த பரிசுகள்..! (சிறுகதை)


குழந்தை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றிருந்தேன். அங்கும் அவனது மனசிற்கு ஆறுதல் கிடைக்கவில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுதியில் இருந்த பிள்ளைகளைப் பார்க்க உறவினர்கள் பெற்றோர்கள் என பரிசுப்பொருட்களுடன் வந்திருந்தார்கள். அவர்களைக் காணுகையில் அந்த பிஞ்சு மனம் எதை எதிர்பாக்கும். எத்தனை தடவை என்னை கேட்டிருக்கிறான். "செல்வி 'ஆன்ரி' எப்ப வருவா மேடம்" என்று. அநாதையான தனக்கு ஆறுதலே செல்வி தான் என்று அந்த பிஞ்சு எண்ணியிருக்க வேண்டும். ஒரு தாய் ஆன்ரியாக வேடம் போட்டபடி 5 வருடங்கள் ஓடிப்போய் விட்டன. தாய்மை வலிக்காமல் விடுமா? ஒரிரு மாசத்திற்கு ஒரு முறை இங்கு வந்து போவாள். இரத்தம் பகிர்ந்த உறவுகளின் சந்திப்பு கைவிட்டு எண்ணக்கூடிய நாட்களில் அடங்கிப்போய்விட்டது. "ஏன் செல்வி ஆன்ரி என்னை மட்டும் என் அப்பா அம்மாக்கு பிடிக்கேல்லை நான் என்ன செய்தனான்" . எத்தனை தடவை ஏங்கி அவளிடமே கேட்டிருக்கும் பச்சைக்குழந்தை. என்னோடு கண்ணீரில் பகிந்து கொள்வாள். கவலைப்படாதே என்று சொல்வதைத் தவிர என்னால் என்னத்தை சொல்லிவிட முடியும். ஏற்கனவே மதிக்கவேண்டிய அறிவுரைகளை மிதித்ததனால் தானே இந்தக்கண்ணீர். அன்று இளமையின் துடிப்பில் வாயால் பேசமுடிந்த அவளால். இன்றைய அவளது நிலையில் தனது தவறை உணர்ந்து வாழமுடியவில்லை. 5 வருடத்திற்கு முன்னால் ஒளிந்தவள் தான் இன்னும் ஒளிந்தபடியே திரிகிறாள்.

எங்கள் கல்லூரி வாழ்வில் கசப்பாய். கூடவே வந்து கொண்டிருக்கின்ற ஓரு வடுவான நிகழ்வாய் போனது செல்வியின் வாழ்க்கை. செல்வி சிவா பிரியாத காதல் ஜோடிகள். காதலர்களாய் இருந்தாலும் மற்றவர் முன்னால் விலகி நடந்த ஒரு சில காதல் ஜோடிகள் முன்... யாரைப்பற்றியும் வருத்தம் இன்றி கைகோர்த்து நடந்து சென்றவர்கள். அவர்களது நெருக்கம் பெற்றவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. செல்வியின் பெற்றோர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூறி வற்புறுத்தினார்கள். தாலி என்ற ஒரு நூலும் இருவரது சாட்சியுடன் கையெழுத்து போட்டு நடைபெறுகின்ற சடங்குகள் தங்கள் காதலிற்கு தேவையில்லை என்று எத்தனை கதை அளந்தார்கள். "எனக்கு சிவா மேல் நம்பிக்கை உண்டு சிவாக்கு என் மேல் நம்பிக்கை உண்டு இதை விட வேறென்ன வேணும்" என்று ஒரு முறை எனது கேள்விக்கு விடை வந்தது. புரட்சி புதுமை என்று பேசுபவர்கள் வாழும் முறைவேறு. இந்த புரட்சியையும் புதுமையையும் இப்படி ஒரு சிலரின் வாழ்வைத்தான் சூறையாடிச் சென்று போனது. சம்பிரதாய சடங்குத் திருமணமோ, பதிவுத் திருமணமோ எதுவுமே இன்றி நம்பிக்கையில் வாழ்வோம் என்று செல்வி வாழ வெளிக்கிட்டாள். அத்துடன் அவளுடனான தொடர்புகளை செல்வியின் வீட்டில் துண்டித்துக்கொண்டார்கள். சிவாவிற்கு வீட்டில் திருமணம் பேசி அவனும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த விடயம் செல்வியின் காதுகளில் விழும்வரை, அந்த முறிந்து போன உறவுகள் செல்விக்கு எந்த தாக்கத்தையம் ஏற்படுத்தியதாக தெரியவில்லை.

அவளைச்சுற்றியிருந்தது நாகரீகமும் புதுமையும் தான். அந்த நம்பிக்கையில் உருவான சின்னம் தான் கதிர். அந்தக் கருவை அழிக்கச் சொல்லி சிவா கூறிவிட்டான். அதை செல்வி மறுத்ததனால் அவர்களது விரிசல் நீண்டது. அதை வைத்து தன்னை உறவு கொண்டாடக்கூடாது என்று பேசினான். அப்பொழுது தான் செல்வி தலைகுனிந்து நின்றாள். நல்ல தோழியாக என்னை நாடி வந்தவள் அலோசனை கேட்டாள். ஒரு சிசுவைக்கொல்வதில் எனக்க உடன்பாடிருக்கவில்லை. பாவத்தின் மேல் பாவம் செய்யாதே என்று ஒரு வரி செல்லி வைத்தேன்.

திருமணப்பத்திரிகை அவளது கைகளில் கிடைத்தது. எதுவுமே நடக்காத மாதிரி சிவா நடந்து கொண்டான். சிவாவின் திருமணம் முடிந்தது, கொழுத்த சீதனத்துடன் உறவுப்பெண்ணொருத்தியை மணந்து கொண்டான். எந்த ஆதாரம் என்ன சாட்சி அவனிடம் நியாயம் கேட்க? நம்பிக்கை என்று ஆரம்பமானது நம்பிக்கை எங்கே போனது. அக்னி சாட்சியாய் அருந்ததி பாத்து, சுற்றம் சூழல் சாட்சியாய், வாழ்த்துகளுடன் வாழ்க்கையில் நுழைந்தவர்கள் கூட பாதை மாறிப்போன கதைகள் உண்டு. இந்த உறவும் நம்பிக்கையில் புதுமையின் கிளர்ச்சியில் ஆரம்பித்து இரகசியமாய் முடிந்தது.

அவனால் எந்த பாதிப்பும் இல்லை என்பதாய் காட்டிக்கொண்டாள் செல்வி. என்னிடம் வந்து அடைக்கலம் புகுந்து கொண்டாள். ஊர் பழிக்கு அஞ்சினாள். பெற்றோர் முகம் பார்க்க பயந்தாள். இரு இளசுகள் செய்த தவறால் உருவாகிப்போன அந்த பிஞ்சு என்ன பாவம் செய்தது. வாடகைக்கு வீடு எடுத்து வேலைக்கு ஆள் அமர்த்தி இரகசியமாய் குழந்தையைப் பெற்றெடுத்து, இரகசியமாய் வளர்த்தாள். இப்போ இந்த விடுதியில் அந்தக் குழந்தை தஞ்சம். பிறப்பின் காரணமோ, இங்கு வாழும் காரணமோ அதுக்கு தெரியாது. ஊர்க் குழந்தைகள் பலர் ஏதேதோ காரணத்திற்காய் இந்த விடுதியில் வந்து தங்கியிருக்கிறார்கள் .

இந்த விடுதியில் உள்ள குழந்தை என்றதைத் தாண்டி என் நண்பியின் குழந்தை என்ற உரிமையோடு நான் கவனமெடுக்கிறேன். மாதம் ஒருமுறை என்னைப் பார்க்கும் சாட்டில் தனது இரண்டாவது கணவனிடம் கதை சொல்லி தன் சேயைப்பாக்க பாசத்தோடு வரும் தாயை பார்க்கையில் பரிதாபம் தான் வருகிறது. தான் செய்த தவறால் ஒரு குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாய் இருப்பதை அவள் உணராமல் இல்லை. இன்று இரண்டு குழந்தைகளிற்கு தகப்பனாய் வாழ்கின்ற சிவாவிற்கு இது பற்றி சிந்தனை வந்திருந்திருந்ததாய் தெரியவில்லை. அவனது நம்பிக்கைக்கு தான் இன்னொரு பெண் வந்துவிட்டாளே.! உறவுகள் தெரியாது ஊர் ஏளனத்தில் நாளை தலைகுனிந்து வாழப்போவது இந்த நம்பிக்கையின் சின்னம் தானே. தடுக்கிவிழும் போது தாங்கிப்பிடிக்க ஒரு தந்தை, பாசம் காட்ட ஒரு தாய் இன்றி தளர்ந்து போகப்போவது இந்த நம்பிக்கையின் சின்னங்கள் தானே. நம்பிக்கை வைத்தவர்கள் வாழ்க்கை தொடர்கதையோ.. ????? நம்பிக்கையின் சின்னங்கள் வாழ்க்கை கேள்விக்குறியோ..?!

free hit counter