Tuesday, January 25, 2005

தாரமானபின் (சிறுகதை)

நண்பர்களுடன் பேசி அவர்களை வழி அனுப்பி விட்டு அறையினுள் நுழைந்து தலையை சீவி அலங்காரத்தில் ஈடுபட்டான் ஈசன். இன்று தான் அவன் திருமணம் முடிந்து இல்லற பந்தத்தில் நுழைகிறான். அது தான் நண்பர்கள் அறிவுரை கூறி வழியனுப்பி விட்டு சென்றார்கள்.

அறையினுள் நுழைந்து கண்ணாடியில் தன் முகம் பார்த்த போது புதிதாய் ஒரு ஒளி தெரிவாதாய் தோன்றியது. கங்கா மனைவியாய் வந்தது அவனுக்கு சந்தோசம். ஒரே ஊர் சிறுவயது முதல் நல்ல பழக்கம் இருவருக்கும். நீண்ட நாட்களாய் நண்பர்களாய் இருந்து ஒரு வருடம் காதலர்களாய் இருந்து இன்று கணவன் மனைவியாய் ஆனாவர்கள்.

ஒரு ஐந்து மாசத்திற்கு முதல் ஒரு முத்தம் கேட்டு கங்காவிடம் வேண்டிக்கட்டிய நினைவு இன்று ஈசனுக்கு வந்தது. "வாடி மவளே இன்டைக்கு வைச்சிருக்கேன்" என்று சிரித்த படி சற்று பின்னோக்கி நினைத்தான். இவர்கள் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்த போது இரு பகுதியும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை. நன்றாய் பழகியவர்கள், புரிந்து கொண்டவர்கள், வாழ்வில் ஒன்று சேர்வதில் எதும் பிரச்சனை இருக்கவில்லை. கங்காவின் பட்டப்படிப்பு முடிய ஐந்து மாசம் இருந்ததனால் அதன் பின் கலியாணம் செய்வது என்று இரு பகுதியும் ஒன்று சேர்ந்து முடிவெடுத்தனர். இவர்கள் இருவரும் காதலர்கள், ஆனால் கங்கா மிகவும் கண்டிப்பானவள் இத்தனை நாள் பழகியும் ஈசனுடன் தனியாய் ஒரு நாளும் வெளியில் சென்றதில்லை, ஒரு நாள் கூட திரைப்படம் பார்க்க சென்றிருந்ததில்லை. அவள் வரமாட்டாள் என்று அவனுக்கு தெரியும் அதனால் கேட்டதில்லை. நண்பர்கள் எல்லாம் தங்கள் காதலி முத்தம் தந்தாள், கட்டிப்பிடித்தாள். என்று கூடிக்கதைக்கும் போது இவனை மட்டும் ஏளனமாய் பார்ப்பார்கள். இப்படி அவர்கள் கதைக்கும் போது கங்காவை அரக்கி என்று கூட தனக்குள் திட்டியிருக்கிறான். ஆம் கங்காவின் கையைக்கூட அவன் பிடித்து நடந்ததில்லை. அவள் அப்படி ஒரு அரக்கி தான் ஆனால் அவனது செல்ல அரக்கி எதற்கும் தனக்கு சுதந்திரம் வேணும் என்று எண்ணுபவள். செய்வது எல்லாவற்றிற்கும் காரணம் சொல்லுவாள்.

நண்பர்கள் நச்சரிப்பு தாங்க முடியாது ஒரு நாள் ஈசன் கங்காவை ஒரு முத்தம் கேட்பதென முடிவுடன் சிறிது கோவத்துடன் போனான். கங்காவை கண்டால் எங்கு கோவம் வாறது? ஒருவாறு வளைஞ்சு நெளிஞ்சு காரியத்திற்கு வந்தான். "ஏன் கங்கா இன்னும் ஐந்து மாசத்தில நான் உனக்கு யார்? " என்று ஆரம்பிச்சான்.
"ஐந்து மாசத்திற்கு பிறகு தெரிஞ்சிடும் தானேடா ஏன் அவசரப்படுறாய்?" என்றாள். "இல்லை நீ எனக்கு மனைவியா வரப்போறவள் ஏன் இப்ப எனக்கொரு முத்தம் தரக்கூடாது?" என்றான். அவளிடமிருந்து கிடைத்தது மெளனம் மட்டுமே. "என்ன நீ எல்லாரும் காதலர்களாய் இருக்கும் போது என்ன என்னவெல்லாம் செய்வாங்கள் நான் மட்டும் தான் ஒரு முத்தம் கூட இல்லாமல் இதுவரை இருக்கிறன்". என்று சற்று கோவிச்சான். இந்த கோவம் அவளை ஒன்றும் செய்யாது என்று அவனிற்கு தெரியும்.

ஏன்டா உனக்கு என்னாச்சு? இங்க பார் ஈசன் நீ எனக்கு நண்பனாய் காதலனாய் நாளைக்கு கணவனாய் வரப்போறவன் இதில எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஒன்றைத்தெரிஞ்சு கொள், முத்தம் கொடுக்கிறதும் கட்டிப்பிடிக்கிறதும் கைகோத்து நடக்கிறதும் பார்க் பீச் தியேட்டர் என்று சுத்துறதும் தான் காதலா? இப்ப முத்தம் கேக்க தோன்றும் பிறகு..? இதுக்கு பேர் காதல் இல்லை ஈசன், காதல் என்கிற பேரில இளசுகள் செய்கிற லீலை. இப்படி திரிகிறவையில எத்தனை பேர் கணவன் மனைவியாய் ஆகியிருக்கினம். நம்ம கலாச்சாரத்தையும் சீரழிச்சு, நம்ம பெற்றோர்கள் மானம் மரியாதையையும் குழி தோண்டிப்புதைத்து. நாலு பேருக்கு காதலர்கள் என்று காட்டிறதில எல்லாம் எனக்கு ஈடுபாடில்லை. இப்ப நாங்கள் இப்படி கண்மூடி திரிஞ்சிட்டு நாளைக்கு வாற சந்ததியை எப்படி திருத்த முடியும். நமக்கு கீழை இருக்கிறவர்கள் நாளைக்கு எங்களை பின்பற்றக்கூடிய மாதிரி நாங்கள் நடக்க வேணும். இது என் கொள்கை, உனக்கு நான் எனக்கு நீ என்று ஆச்சு. உன் மனசில சுத்தமாய் காதல் தான் இருக்கு என்றால் எனக்காய் காத்திரு. அப்படி இல்லை என்றால் உனக்கு ஏற்றாற் போல ஒரு காதலை தேடிக்கொள்ளலாம், இன்னொரு வழியிருக்கு வேணும் என்றால் சொல்லு நம்ம பெற்றோருக்க சொல்லி அடுத்த கிழமையே நம்ம கலியாணத்தை வைச்சுக்கலாம் எப்படி வசதி" என்று கூறி முடிச்சாள்.அன்று அவளை ஒரு தமிழ் பெண்ணாய், சிறந்த ஒரு காதலியாய் பார்த்தான்.

ஐந்து மாசம் ஓடிப்போனது. இன்று கலியாணமும் முடிந்துவிட்டது. இன்று அவர்கள் இருவரும் கணவன் மணைவியாய் இல்லறத்தில் நுழைந்தனர். அவள் இல்லறத்தில் அவனுக்கு ஒளிகொடுக்கும் விளக்காய் நல்ல துணைவியாய். அவன் அன்று கேட்டதும் இன்று கேட்காததும் கேட்காமலே அவனிற்கு கிடைத்தது. அவன் தாரமாய் அவள் அவனுடன். இன்று அவன் இதயத்தில் மட்டும் அல்ல இல்லறத்தினுள்ளும் அவள் தான் விளக்காய்.......!


http://sooriyan.com/index.php?option=content&task=view&id=1217&Itemid=

free hit counter