Tuesday, August 30, 2005

காதலில் காதல்.! (1)

அம்மா வீட்டிற்கு வந்திருந்தா எனக்கு சுத்தமாய் பிடிக்கேல்ல, ஒரு கடிதம் போட்டிட்டு வந்திருக்கலாம். சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறா. இன்னும் நாலைஞ்சு நாளைக்கு ஒரே புராணமாய் போப்போது. வர வர நின்மதியில்லாமல் போச்சு என்ர அறைக்கதவை பூட்டி திறப்பைக்கொண்டு போகவேணும். இல்லை என்றால் மனிசி அறையை ஒரு கை பாத்திடும். போனமுறை வந்து செய்த வேலை காணும். படங்கள் எல்லாத்தையும் பொறுக்கி ஒழிச்சுப்போட்டா. வந்த கோவத்திற்கு வேறை யாரும் என்றால் நடக்கிறதே வேறை அம்மா என்டதால விட்டிட்டு இருந்தனான்.

அவாக்கு இதே வேலையாப்போச்சு எத்தனை வருசமாச்சு சொன்னாக்கேக்கமாட்டன் என்கிறா. அவாவும் பாவம் தானே. என்ர காதல் புனிதம் அவவுக் எப்படிப்புரியும். பாவம் வந்தவ சந்தோசமாய் போகட்டும். என்ன கதைச்சாலும் சத்தம் போடாமல் இருப்பம். அந்த நினைவுகளோட வாழுறதே எனக்கு சந்தோசம் தான். அதை பெத்த தாய் அனுமதிக்க மாட்டா தான். இருந்தாலும் ஏனக்கு அதில நின்மதி. இப்ப நினைச்சாலும் வலு சந்தோசம் தான்.
------
அப்ப நான் A/L படிச்சிட்டிருந்தனான் ராதிகாவும் இந்த சிவபுரம் மகாவித்தியாலத்தில தான் படிச்சிட்டிருந்தவ. அவ அப்ப சின்னப்பிள்ளை ஆனா என்ர மனசில ஆழமாய் பதிஞ்சிட்டா, அழகான பிள்ளை தான். அவளின்ர பேச்சு தான் என்னைக்கவர்ந்தது. துடுக்காய் பேசுவாள், பயப்பிடத்தெரியாது. எங்கட ஆசிரியர்கள், மாணவர்கள் என்று எல்லாரிட்டையும் பிரபல்யமாய் இருந்தவள்.

சிவபுரத்தில இடம் பெயர்ந்து வந்திருந்தாள், சொந்த இடம் யாழ்ப்பாணத்தில எங்கையோ தான். ஏழாம் ஆண்டில் தான் அவள் முதல் முதல் சிவபுரம் வந்தவள். வந்த கொஞ்ச நாளில தன்ர திறமைகளைக்காட்டி எல்லாரின்ர மனசிலையும் இடம் பிடிச்சிட்டாள்.
முதல் முதல் அவள் எனக்கு அறிமுகமானது ஒரு சின்னச்சண்டையில தான். எங்கட பெடியள் வெறும் கமறாவை வைச்சு பொம்பிளைப்பிள்ளைகளை படம் எடுக்கிறம் என்று பிளாஸ் அடிச்சிக்கொண்டு இருந்தவங்கள். அதுக்குள்ள பிலிம்றோல் இல்லை இதைத்தெரியாத அந்தப்பிள்ளையள் பயந்து வரமறுத்திட்டுதுகள். என்ன இது வேலை என்று கேக்க சின்னனுகளை அனுப்பி விட்டிருந்தவை


அப்ப வந்தவள் தான் ராதிகா. பயப்பிடாமல் வந்து எங்கட பெடியளை நல்ல கேள்வி கேட்டாள். இன்னும் ஒருபடி மேல போய் கமறாப்பறிச்சு பிலிம்றோலைக்கழட்ட முயன்றாள் அப்ப தான் அவைக்கு தெரியும் வெறும் கமறாவை வைத்து பிளாஸ் அடிக்கிறம் என்ற விசயம். அதன்பிறக பிளாஷ் என்று எல்லாரும் நினைத்திருக்க நான் மட்டும் ராதிகாவை பலவடிவங்களில் அடிக்கடி படம் எடுப்பேன். இரண்டு அல்பங்கள் நிறைய அவளின் படங்கள் என்னிடம் இருக்கிறது. இது அவளிற்கே தெரியாத விடயம். எனது சகதோழன் நெருங்கிய நண்பன் கரனுக்கு மட்டும் தெரியும். சிவா வேண்டாமடா என்று பலமுறை சொல்லியிருக்கிறான்.
அதுக்கு பிறகு பிள்ளையள் எல்லாம் பயப்பிடாமல் வருங்கள் படத்தை எடுத்தா எங்கட பொடியள் கலியாணம் முடிச்சமாதிரி அலுவல் பண்ணிப்போடுவாங்கள் என்ற பயம் தான் அந்தப்பிள்ளையளுக்க.
அன்று தான் அவள் எனக்கு அறிமுகம். அவளின் துணிவு எனக்கு பிடிச்சிருந்தது. அதுக்கு பிறகு அவளை கவனிக்க ஆரம்பிச்சிட்டன். அன்று "கெட்டிகாரி எப்பவும் இப்படி துணிவா இருக்கவேணும் " என்று பாராட்டிவிட்டேன். "நன்றி அண்ணா, உங்கட நண்பர்களிற்கு கொஞ்சம் அறிவுரை சொல்லக்கூடாதா?" என்று என்னைக்கடிச்சு விட்டுச்சென்றாள்.
அன்றில் இருந்து அவளோடு பழக்கம் ஆரம்பமானது.

ஒரு நாள் நான் ரியுசனில் நிக்கும் வேளை. என்னோடு O/L லில் கூடப்படிச்ச கணேஸ் ராதிகாவை ஏத்திக்கொண்டு வந்தான். யார் என்று விசாரித்ததில் அவள் கணேஸின் ஓரே ஒரு செல்லத்தங்கை என்ற விவரம் கிடைத்தது. அவன் எனது நண்பன் தான் நான் A/L லில் கலைப்பிரிவிற்குள் நுழைந்தேன். அவன் வர்த்தகம் படிச்சவன். இருந்தாலும் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். அவனின் தங்கை என்பது எனக்கு இன்னும் மகிழ்ச்சியே.
ஒரு சில வாரங்கள் ஓடின. இரண்டு நாளாய் அவளை நான் காணவே இல்லை. எங்கை என்று விசாரிச்சதில் அவள் பெரியமனிசியாகி விட்டாள் என்ற செய்தி கிடைச்சது. சாதாரனவிடயம் தானே ஆனால் அது என்னை ஆட்டிப்படைத்தது. கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்தேன். ஏன் என்ற கேள்விக்கு அவள் பள்ளிக்கூடம் வராத 3 கிழமைகள் என்னை வாட்டிய ஏதோ ஒரு நினைவு பதில் சொன்னது. அதுவரை இருந்த அன்பு காதலாய் மாறியதாக உணர்ந்தேன். ராதிகாவிற்கு மஞ்சள் நீராட்டு விழா அவளது பள்ளி தோழிகள் ஆசிரியர்களிற்கு சொல்லி சிறப்பாக நடந்தது. கணேஸின் நண்பர்கள் என்ற ரீதியில் நாமும் கலந்து கொண்டோம். உண்மையைச்சொன்னால் நான் அந்த சடங்கிற்காய் அதிக வேலை செய்திருந்தேன். அதில் எனக்கு மகிழ்ச்சியும் கூடத்தான். ராதிகா அன்று நடந்து கொண்ட விதத்தில் அவளிற்கு இந்த நிகழ்வில் விருப்பம் இல்லை என அறிந்து கொண்டேன். சாதாரனமாகவே அவள் புதுமை பேசும் பெண். இதை எப்படி ஏற்பாள்.? (நமது சமூகத்தில் இந்த சடங்கு என்பது ஒரு நிகழ்வாக கொண்டாடப்படுவது வழக்கமே)

நண்பனின் தங்கை என்பதால் நண்பர்கள் எல்லோரும் சேந்து கொஞ்சக்கொஞ்ச காச சேத்து ஒரு பரிசுப்பொருள் வாங்குவதாக திட்டமிட்டிருந்தார்கள். அந்த பரிசுப்பொருளுக்கு நானும் காசு கொடுத்திருந்தேன். ஆனால் அவளிற்காய் தனியாக ஒரு சிறிய மோதிரமும் வாங்கியிருந்தேன். கடைசி வரை அவளிற்கு அதைக்கொடுக்க முடியவில்லை. இப்பவும் அதை வைத்திருக்கிறேன்.
அதன் பிறகு அவளில் பலமாற்றங்கள். வளர்ந்து விட்டாள் அழகாய் மிளிர்ந்தாள். அவளை பார்த்திட்டு இருப்பது எனது முழுநேர வேலையாக மாறிவிட்டது. அவளது பள்ளிக்கூட மற்றும் ரீயுசன் நேர அட்டவணைகளிற்கேற்ப எனது வேலைகளை குறித்துக்கொண்டேன். எப்பொழுதும் அவளைத்தரிசிப்பதாற்காய் காத்திருப்பேன். அதில எத்தனை சுகம். அடிக்கடி நினைத்துச்சிரிப்பேன்.
அவளோடு கதைப்பதற்கான, அவளுக்கு உதவி செய்வதற்கான சந்தர்ப்பங்களை வலிய நானாய் உருவாக்கினேன். அவளுக்கு தெரியாத நேரம் அவளது துவிச்சக்கரவண்டியில் காத்தைத்திறந்து விடுவேன். அவளிற்கு முன்னால் காற்றடிப்பேன். அவளது அன்பைப்பெற பல வழிகளில் முயன்றிருக்கேன். ஒரு முறை நல்ல மழை அவள் குடை கொண்டு வர மறந்துவிட்டாள். என்ர குடையைக்கொடுத்தேன். "நீஙக என்ன செய்வீங்க" என்று கேட்டாள். "பக்கத்தில்தானே வீடு போய்விடுவேன்" என்று சொன்னேன். மறுநாள் குடையை திருப்பித்தந்தாள். எனது பொருட்களை சாதாரனமாகவே யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை.

என்னைப்பொறுத்தவரை அவள் வேறாக தெரியவில்லை. அன்றில் இருந்து அந்தக்குடைக்கு தனியான கவனிப்பு அந்தப்படியே இப்போதும் வைத்திருக்கிறேன். நான் வீட்டிற்குள் எனது அறையினுள் அடிக்கடி பிடிப்பதுண்டு. அதற்குப்பிறகு அந்தக்குடை வெளியுலகம் சென்றதில்லை. இப்படி அவளுடைய நினைவுகள் சுமந்து என்னோடு வாழும் ஒவ்வொரு பொருட்களிற்கும் கதைகள் உண்டு.

ஓரு முறை சரஸ்வதிப்பூசைக்கு அவள் தனி நடனம் ஆடியிருந்தாள் அன்றும் படம் எடுத்திருந்தேன். "ஏன் என்னை நீங்கள் படம் எடுத்தனீங்கள்" என்று அவள் கேட்ட கேள்விக்கு அவளிடம் பதில் சொல்ல எனக்கு முடியவில்லை. எங்கள் வகுப்புப்பிள்ளைகளை எடுக்கும் போது உங்களையும் எடுத்தான் என்று கரன் சொல்லிச்சமாளித்தான். அப்படியே ஒரு சில படங்களையும் கொடுத்தேன். பணம் கட்டாமல் வாங்க மாட்டன் என்று சொல்லிவிட்டாள். அதற்காக அவளிடம் வாங்கிய 125 ரூபா இன்னும் என்னிடம் உள்ளது. இப்படியே தொடந்தது வருசம் ஓன்று போயாகிவிட்டது. அவளிடம் காதல் சொல்ல நான் நினைக்கவில்லை. சொல்லவும் முடியவில்லை. அவளை காதலிப்பதாக கூறிய இன்னொருவனை அவள் பேசியதாக அறிந்தேன். அதனால் எனக்கும் அவளிற்கும் விரிசல் வந்துவிடக்கூடாது என்பதால் காத்திருந்தேன். அவளிற்கு முன்னால் என்னை பகிடிபண்ணுவார்கள் பட்டம் தெளிப்பார்கள். இருவரும் ஒரே நேரம் ஒரு இடத்தில் நின்றால் குடும்பமா வந்திட்டியளா என்று கேட்பார்கள். ஆனால் இவைகள் அவளிற்கு விளங்கியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை அந்த நேரங்களில் அவளிடம் எந்த மாற்றத்தையும் நான் கனவில்லை. நான் அவளைக்காதலிக்கும் விடையம் எனது வீட்டிற்கு சாதுவாக தெரிந்திருந்தது. அப்படியே எனது ஆசிரியர்களிற்கும் தெரிந்திருந்தது. "சிவா ராதிகா எங்கே" என்று என்னைக்கேலி பண்ணியிருக்கிறார் எங்கள் தலைமை ஆசிரியர் ராகவன். அது எனக்கு பலத்த சந்தோசத்தைக்கொடுக்கும். அந்த நிமிடங்கள் நான் பறந்து கொண்டிருப்பேன். இப்படி எனக்குள்ளே காதலை புதைத்த நான். கடைசிவரை என் காதலை அவளிடம் சொல்லாமல் இருப்பேன் என்று நினைக்கவில்லை. சொல்வது அவசியமாகவும் எனக்க படவில்லை. "

அடுத்தபகுதி

0 Comments:

Post a Comment

<< Home

free hit counter